Wednesday, March 18, 2015

ஆப்கானிஸ்தானில் போராடிய இலங்கை போராளியின் நேரடி அனுபவம் - இறுதிப் பகுதி

முட்டாளாக லோக்கல் இஸ்லாமிய இயக்கங்களின் பொய்களில் ஏமாந்தேன். முட்டாளாகவே ஹிஸ்பி இஸ்லாமியை வந்தடைந்தேன். முட்டாளாகவே ஹிஸ்புல் முஜாஹிதீனிற்காக ஆப்கானில் செயற்பட்டேன். ஆனால் எப்போது புத்திசாலியாக சிந்திக்க ஆரம்பித்தேனோ, செயற்பட்டேனோ அப்போது நான் அங்கு உயிர் வாழ தகுதியில்லாத போராளியாகி போனேன்.


ஒரு முறை எமது முகாமிற்கு அருகில் உள்ள சந்தையில் சிலர் புதிதாக நடமாடியதும் அவர்கள் அல்-பத்ர்1 முகாம் பற்றி விசாரிப்பதும் பற்றிய துப்புத் தகவல் எமக்கு கிடைத்தது. சடுதியாக எமது அணியினர் அங்கு சென்று இவர்களை சுற்றி வளைத்து பிடித்து முகாம் கொண்டு வந்து விட்டனர். பின்னர் விசாரணை. அவர்கள் பதில்கள் ஒன்றுக்கு பின் முரணாக இருக்கவே நாம் அவர்களை அடித்து நொறுக்கி விட்டோம். இது நடந்து கொண்டிருக்கும் போது ஒரு ஜீப் வேகமாக எமது முகாமை நோக்கி வந்தது. அதில் இருந்து இறங்கி சில அதிகாரிகள் அல் பத்ர் உள்ளே வந்தனர். அவர்கள் ஐ.எஸ்.ஐ. முகவர்கள்.

“நீங்கள் பிடித்து வைத்துள்ளவர்கள் எமது ஐ.எஸ்.ஐ. ட்ரெய்னிகள். உளவறிதல் தொடர்பான பயிற்ச்சிக்காக நாம் தான் அவர்களை உங்கள் முகாம் பற்றிய செய்தி சேகரிப்பிற்கு அனுப்பினோம்” என்றார்கள். நாம் அவர்களை மீண்டும் திருப்பி வந்தவர்களிடம் ஒப்படைத்தோம். இந்த நிகழ்வும் ஹிக்மதியாரிடமும் ஐ.எஸ்.ஐ. க்கான ஆப்கான் டைரக்கடரிடமும் சென்றடைந்தது.

ஐ.எஸ்.ஐ. உடனேயே ஒரு உயர்நிலை அதிகாரியை எமது முகாமிற்கு அனுப்பி வைத்தது. சிட்டிவேஷன் ரிப்போட்டிங்கிற்காக.

எமது முகாமில் நாம் ஒரு செம்மறியாட்டை வளர்த்து வந்தோம். கடாய் ஆடு. அதன் பிடரியில் அடித்தால் அது கோபம் கொண்டு அடித்தவரை முட்ட வரும். அதனை ஒரு கரத்தினால் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும் எமது பயிற்ச்சியில் ஒரு பகுதி.

எமது அல்-பத்ர் 01 ஐ பார்வையிட வந்த ஐ.எஸ்.ஐ. உயரதிகாரி என்னுடன் முகாம் சம்மந்தமாக பலதையும் துருவி துருவி கேட்டறிந்து கொண்டார். ஒரு கட்டத்தில் அந்த ஆட்டினை பார்த்தவர் எதேச்சையாக அதன் தலையை தட்டி நன்றாக வளர்ந்துள்ளது. அறுக்கவில்லையா? என்றார் யதார்த்தமாக. இப்போது ஆட்டிற்கு சூடேறி விட்டது. இரண்டு பின்னங்கால்களையும் நிலத்தில் உதைத்து விட்டு நடந்து சென்று கொண்டிருந்த ஐ.எஸ்.ஐ. அதிகாரியின் பிஷ்டத்தில் (பின்புறத்தில்) முட்டி, கொம்பால் குத்தியது. அவர் உருண்டு விழுந்தார். எழுந்த போது அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. அவரது இடுப்பில் சிறு உடைவு ஏற்பட்டிருந்தது.

அவர் தனது டைரக்கடரிற்கு ஒரு ரிப்போர்ட்டினை எமது கேம்ப்பற்றி அனுப்பியிருந்தார். அதில் “அவர்களின் ஆடு கூட தாக்குதல் நடாத்துகிறது” என்பதனை அவர் குறிப்பிட தவறவில்லை


பக்தமீன் சாகிப் வழிமறிக்கப்பட்டமை, குல்புதீன் ஹிக்மதியாரின் மெய்பாதுகாவலர்களின் துப்பாக்கி பறிக்கப்பட்டமை, ஐ.எஸ்.ஐ. ஏஜென்டுகள் நையப்புடைக்கப்பட்டமை, ஐ.எஸ்.ஐ. இன்குவரி ஒபிசரின் இடுப்பு ஒடிக்கப்பட்டமை என எம்மை பற்றி நிறையவே பேசப்பட்டன.

ஒரு நாள் ஒரு ஓடர் வந்தது.

என்னை இன்னொரு முகாமிற்கு விஷேட பயிற்ச்சிக்காக செல்லுமாறு பணிக்கப்பட்டிருந்தது. அந்த முகாமின் பெயர் “அரப் கேம்ப்”. ஆப்கானிய சண்டைக்காக மத்தியகிழக்கில் இருந்து வந்தவர்கள் இந்த முகாமை நடாத்தி வந்தனர். ஹிக்மதியாரின் அணியினருடன் இணைந்து அவர்கள் ஆப்கானிய ஜிஹாதில் செயற்பட்டு வந்தனர். “அம்புஸ் ட்ரெய்னிங்” என்றே என்னை அழைத்து சென்றிருந்தனர். ஒரு மூவ் செய்த போது என்னை சைட்சார்ஜர் மூலம் குளோஸ் பண்ணுவதே அவர்கள் திட்டம்.

இறைவன் அருளால் எனக்கு ஒன்றும் ஆகவில்லை. நான் ஒரு வேளை மரணித்திருந்தால், ரஷ்யர்கள் வைத்த கிளைமோரில் நான் கொல்லப்பட்டதாக எனது கேம்பில் கதைவிட்டிருப்பார்கள்.

ஏன், எதற்கு என்ற கேள்விகளிற்கு அப்பால் முட்டாளாக இருந்து முட்டாளாக போராடி, முட்டாளாக மரணிப்பதற்கு பெயரே ஜிஹாத். இது எனக்கு தெரியாமால் போயிற்று.

முட்டாளாக லோக்கல் இஸ்லாமிய இயக்கங்களின் பொய்களில் ஏமாந்தேன். முட்டாளாகவே ஹிஸ்பி இஸ்லாமியை வந்தடைந்தேன். முட்டாளாகவே ஹிஸ்புல் முஜாஹிதீனிற்காக ஆப்கானில் செயற்பட்டேன். ஆனால் எப்போது புத்திசாலியாக சிந்திக்க ஆரம்பித்தேனோ, செயற்பட்டேனோ அப்போது நான் அங்கு உயிர் வாழ தகுதியில்லாத போராளியாகி போனேன்.


பின்னாட்களில் தோழர்கள் சொன்னார்கள் அரப் கேம்பில் சரியாக சிந்தித்து நேர்மையாக செயற்படுபவர்களை அடுத்த கட்ட ட்ரெயினிங் என்ற பெயரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் கேம்பிற்கு உள்ளிழுத்து ஒரு எக்ஸ்புளோஸிவில் அவரை சமாதி கட்டுவது. அது போல ஹிஸ்பி டீமில் சரியாக சிந்தித்து நேர்மையாக செயற்படுபவரை அடுத்த கட்ட ட்ரெயினிங் என்று சொல்லி அரப் கேம்பிற்கு அழைத்து அம்புஸ்ஸில் கொல்வது. இது இவர்களது பரஸ்பர ஒத்துழைப்பு. ஜிஹாத்திற்கு எதிரான சிந்தனைகளுடன் செயற்படுபவன் என்ற தகவலின் அடிப்படையில் இந்த கொலைகள் நடந்து வந்தன.


லபீப் பாய் எனும் துப்பாக்கியால் துல்லியமாக குறிபார்த்து சுடும் ஒரு சிறப்பு போராளியையும் இவ்வாறே அரப் கேம்பில் வைத்து அம்புஸ் செய்ததாக ஒரு சகோதரர் எனக்கு கூறினார்.

தமிழ் இயக்கங்களிற்கு இந்தியா ட்ரெய்னிங் கொடுத்த போது அவர்களது உத்தரபிரதேச ட்ரெய்னிங்கின் போதும், புளொட்டின் தஞ்சாவூர் ட்ரெய்னிங்கின் போதும் தங்கள் உளவு பிரிவு போராளிகளை பயிற்ச்சிக்கு வந்த போராளிகளுடன் கலந்து விடுவர். பின்னர் இயக்கத்தில் உள்ள ஜனநாயக விரோத செயற்பாடுகளை யார் விமர்சிக்கின்றார்களோ அவர்கள் பற்றிய விபரங்களை இந்த உளவாளிகள் மூலம் திரட்டுவர். அவர்களை சுட்டு கொன்று சவுக்குத் தோட்டத்தில் புதைத்து விடுவர்.

யாழ்ப்பாணத்தில் அவர்கள் சொல்வது என்ன தெரியுமா?.. “குறித்த போராளி வண்டியில் (வள்ளத்தில்) வரும் போது சிங்கள கடற்படை படகுகள் சுற்றி வளைத்து அந்த வண்டியை கடலில் மூழ்கடித்து விட்டது. இறக்கும் வரை அந்த போராளி தனது துப்பாக்கியால் கடற்படைக்கு எதிராக சுட்டவாறே வீரனாக மரணித்தான்” என்று.

எனக்கு, இவர்களிற்கும் அவர்களிற்கும் வித்தியாசம் புரியவில்லை. உள்ளியக்க படுகொலைகளும், சகோதர இயக்க படுகொலைகளும் தமிழ் இயக்கங்களிடம் இருந்தது சரி, அவர்கள் காபிர்கள், ஆனால் நாம் அல்லாஹ்விற்காக போராட வந்த முஜாஹித்கள். நாளை மறுமை என்று ஒன்று உள்ளது. அங்கு எமது செயல்களிற்கான விசாரணையும் உள்ளது. அப்படியிருந்தும் இவர்கள் எப்படி முஜாஹித்களை கொலை செய்கிறார்கள். டொலர்களிற்காக முஜாஹித்களை கொல்லும் இவர்கள் எந்த பட்டியலில் உள்ளடக்கப்படுவார்கள்?.

கூகிளும், ஸ்கைபும், சம்சுங் கலக்ஷியும் இல்லாத நாட்கள் அவை. உள்ளூர் முல்லா மெளலவிகளின் பொய்கள், ஏமாற்றுகள், பித்தலாட்டங்களை நம்பி ஆப்கானிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட புரோய்லார்கள் நாங்கள். அதில் நானும் ஒருவன். சினிமாவில் கோரஸ் பாடவும் நடிக்கவும் சேர்த்துகொள்ளப்படும் துணை நடிகர்கள் போல நஸரானிகளின் உலக அரசியல் ஒழுங்கை நிர்ணயிக்க ஜிஹாத் என்ற பெயரில் டொலர்களிற்கு அகீதாவை விற்ற துரோக இஸ்லாமிய இயக்கங்களால் பலியாக்கப்பட்ட பலிக்கடாக்களில் நானும் ஒருவன்.

இஸ்லாத்தின் பெயரிலும் புனித ஜிஹாதின் பெயரிலும் இப்படியொரு அநியாயம் யாருக்கும் நடக்கக் கூடாது.

ஆப்கானியர்கள் அல்லாஹ்வின் ஆட்சிக்காக போராடவில்லை. கிலாபாவை கொண்டு வரவும் போராடவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட மண்ணின் விடுதலைக்காக போராடினார்கள். அவர்களின் மண்ணிற்கு நாம் ஏன் உரமாக வேண்டும்? உரமான அந்த மண்ணில் ஒரு ஆப்கானிய குழந்தை மூத்திரம் பேய்வதோடு எமது தியாகங்களும் அர்ப்பணங்களும் கழுவப்பட்டு விடுகின்றன. அவ்வளவுதான்.

நான் எனது மண்ணிற்கு சில வருடங்களின் பின் உயிருடன் மீண்டு வந்தேன்.

அன்று ஆப்கானிய முஜாஹித்களின் வீர வரலாறு பேசிய இஸ்லாமிய இயக்கங்கள் இன்று தலிபான்களின் தற்கொலை தாக்குதல்கள், ISIS இன் கிலாபா, அர்துகானின் (எர்டோகன்) துருக்கி அரசியல் சர்வாதிகாரம் பற்றி புளுகாங்கிதம் அடைந்து பேசிக்கொண்டிருந்தன.

என்னுடன் உயிர் தப்பிய எனது கேம்ப் நண்பன் எனக்கு முன்னதாகவே தாய் மண் வந்து விட்டான். அவன் இந்த இஸ்லாமிய இயக்கங்கள் சொன்ன சில செய்திகளை வைத்திருந்தான். அவற்றில் ஒன்று...

லபீப் பாய் பற்றியது. அஷ்-ஷஹீத் பட்டம் கொடுத்திருந்தது நமது லோக்கல் இஸ்லாமிய இயக்கம் அவரிற்கு. ரஷ்யர்களை கலங்கடித்த வேளை ஒரு சோவியத் தோட்டா அவர் உடலை பததம் பார்த்ததாக மூகாரி பாடினான் ஒரு பிரபல முல்லா. அவரது உடல் அவரது ஊரிற்கு கொண்டு வரப்படும் வரை அன்று மலர்ந்த ரோஜா போல் இருந்ததாக அது சொல்லியிருந்தது.

10 பாகை செல்சியஸ் குளிரில் உள்ள ஒரு பிரேதம் ஒரு போதும் வாடாது. இது சயன்ஸ். இதனை அற்புதமாக, முஹ்ஜிசாத் ஆக இந்த முல்லாக்கள் எப்படியெல்லாம் காட்டி அப்பாவிகளை ஏமாற்றி, தங்கள் இயக்கங்களையும், வயிறுகளையும் வளர்த்துக் கொள்கின்றனர்.

குல்புத்தின் ஹிக்மதியாரை வலியுல்லாஹ் ஆக்கியிருந்தார்கள் என் நாட்டில். அவரது சமர்க்கள கராமத்துக்கள் (அதிசயங்கள்) பற்றி ஆதாரம் இல்லாத பல கட்டுக் கதைகளை சொல்லிக்கொண்டிருந்தார்கள் முல்லாக்கள். இலங்கையில் ஒரு மடையன் இஸ்லாமிய இயக்க பைத்தியம் முற்றிய நிலையில் தன் குழந்தைக்கும் பெயர் வைத்திருந்தான் "ஹிக்மதியார்" என்று.

சில வருடங்களிற்கு முன்னர் “தி பீஸ்ட்” என்ற ரஷ்ய டாங்கி ஒன்று ஆப்கானியல் செய்யும் அநியாயங்கள் பற்றிய படம் பார்க்க கிடைத்தது. எனதருகில் இருந்த என் இஸ்லாமிய இயக்க நண்பர் ஒருவர் திடீரென ஆவேசமடைந்தார். அவர் சொன்னார் “பாருங்கள் ஆப்கான் முஜாஹித்களை எப்படி முட்டாள்களாக சித்தரிக்கிறார்கள் மேற்கின் மீடியாக்கள் என..”. நான் சொன்னேன் இல்லை சகோதரா. இந்த படத்தில் காட்டப்படுவது தான் உண்மை. கள யதார்த்தம். சரியாக காட்டியுள்ளார்கள். ஆப்கான் முஸாஹித்கள் பற்றி உங்கள் இஸ்லாமிய இயக்கம் தான் உங்களை தவறாக வழிநடாத்தியுள்ளது. அவர்கள் ஆப்கான் பற்றி உங்களிற்கு சொல்லித்தந்த அபரீதமான கற்பனை அபத்தங்கள் தான் உங்களை இவ்வாறு பேச வைத்துள்ளது என்று.

இந்த பதிவை நான் எழுதிய நோக்கத்ததை மீண்டும் ஞபாகப்படுத்த வேண்டியது எனது கடமையாக உணர்கின்றேன். சகோதரர்களே !!

அல்-ஜிஹாத் புனிதமானது. அதனை குர்-ஆன் சுன்னாவின் ஒளியில் தேட வேண்டும். ஜிஹாதை உள்வாங்க முன்பு அது பற்றிய தெளிவான துல்லியமான அறிவு எமக்கு அவசியம். இஸ்லாமிய வரலாற்றின் பரிபூரண அறிவில்லாமல் நாம் அது பற்றி பேசுவதோ, அதற்காக இயங்குவதோ எம்மை பல வேளைகளில் ஏமாற்றி விடும். பூகோள அரசியலை வைத்து வேறு தேவைகளுக்காக நடக்கும் ஆயுதப்போராட்டங்களை ஜிஹாத் களங்களாக காட்டப்படும் இந்த மாயையை நாம் கண்டறிதல் அவசியம். ..

மீண்டும் சொல்கிறேன் “அல்லாஹ்விற்காக போராட போய் அமெரிக்காவிற்காக மரணிப்பதை விட பெரிய ஒரு முட்டாள்தனம் உலகில் வேறெதுவும் கிடையாது.”

இதன் முந்தைய பகுதிகளை வாசிக்க :

பகுதி 01 : http://jamathgames.blogspot.com/2015/02/01_8.html

பகுதி 02 :  http://jamathgames.blogspot.com/2015/02/02.html

பகுதி 03 : http://jamathgames.blogspot.com/2015/03/blog-post.html







1 comment:

  1. இந்த கட்டுரையை எழுதியவன் ரஷியாவின் க்கைக்கூலி என்பதை கட்டுரையை வாதிக்கும் எவரும் புனு கொள்ளலாம் ஷீயாக்கள்ள்ட ஸ்ரீலங்கா ஏஜெண்ட் ஜமாத் கேம்ஸ் இவனுஹல் யாரெண்டு தேடி சட்ட நடவடிக்கை எடுக்கனும்

    ReplyDelete