Sunday, February 8, 2015

அல்லாஹ்வின் பெயரால் ஆப்கானில் போராடிய இலங்கை முஜாஹிதீன் நேரடி அனுபவம் - பகுதி 01



ஆப்கானிஸ்தானில் போராடிய தமிழ் பேசும் சகோதரனின் குறிப்புகளில் இருந்து..!! அதிர்ச்சிகளும், ஆச்சரியங்களும் காத்திருக்கின்றன.

என்னுடன் எனது ஊரைச்சேர்ந்த இன்னொரு நண்பனும் இருந்தான். நாம் பிக்-அப்பில் ஏற்றப்பட்டு கோஸ்ட் மாகாணத்தின் மலைகளின் ஊடான பயணத்தின் பின்னர் ஒரு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டோம். அந்த முகாமின் பெயர் அல்-பத்ர் - 1.




"ஜிஹாத் - முஜாஹித் - ஷஹாதத்" இந்த வார்த்தைகளின் புனிதத்துவம் பற்றி அறியாதவன் அல்ல நான். இந்த பதிவை எழுதும் நோக்கம் இவற்றை இழிவுபடுத்துவதுமல்ல. மாறாக இன் த நேம் ஒப் ஜிஹாத் என்ற பெயரில் உலகம் முழுதும் அமெரிக்காவின் பிராந்திய நலன்களிற்காக முஸ்லிம் இளைஞர்கள் பலியிடப்படுவதை எதிர்ப்பவன்.

எங்கோ ஒரு கிழக்கைரோப்பிய அல்லது லத்தீன் அமெரிக்க நாட்டின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஐந்து ரூபாய் பெறுமதி கூட இல்லாத பித்தளை தோட்டாவிற்கு, அல்லாஹ்விற்காக போராட முன்வந்த ஒரு முஸ்லிம் உயிர் எவ்வித அர்த்தமுமில்லாமல் பலியாக்கப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.


முஸ்லிம் இளைஞர்களின் உணர்வுகளையும் ரத்த நாளங்களையும் சூடேற்றி அவர்களை போர்க்குணமிக்கவர்களாக மாற்றி, அதன் மூலம் தங்கள் பண, நிதிகளிற்காகவும் இமேஜிற்காகவும், ஜிஹாத் எனும் பெயரில் நஸரானிய கொலை மடுவங்களில் பலியிடப்படும் முஸ்லிம் உம்மாவின் உயிர்களிற்காக நான் தினமும் கண்ணீர் வடிக்கின்றேன்.


ஒரு துண்டு சீஸிற்காக துப்பாக்கியை உயர்த்திய ஆப்கானியன் முதல் 3.5 அமெரிக்க டொலர் (சுமார் 500 இலங்கை ரூபாய்) தினக்கூலிக்காக ஷாமில் - சிரியாவில் சண்டையிடும் F.S.A.போராளிவரை இந்த நிலையே தொடர்கிறது. உணற்சிகரமான எழுத்துக்கள், பேச்சுக்கள், பயான்கள், காணொளிகள் என்பவற்றில் மயங்கி, உண்மையை உணராமல், அல்லாவிற்காக என எண்ணி ஏமாந்து, அமெரிக்காவிற்காக பலியாகும் முஸ்லிம் இளைஞர்கள் விழிப்படைய வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இது பதிவு செய்யப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் போராடிய தமிழ் பேசும் சகோதரனின் குறிப்புகளில் இருந்து..!! (பகுதி - 01)



“முதன் முதல் எனது AK-47 ஐ உயர்த்தி சுட்ட போது அதன் பரலில் இருந்து நெடிய கந்தக மணம் வந்தது. நாட்கள் செல்ல செல்ல எங்கள் எல்லோருடைய பரல்களில் இருந்தும் அமெரிக்க டொலர் மணம் கமழ ஆரம்பித்தது”. இது தான் நான் பார்த்த ஆப்கானிஸ்தான்.


“வானத்தை நோக்கி எறியப்படும் எல்லா கற்களும் பூமியை நோக்கியே வந்தடையும்” என்ற தத்துவத்தை அனுபவரீதியாக புரிந்து கொண்டவர்களில் நானும் ஒருவன். உலகில் ஸோ கோல்ட் ஜிஹாத் என எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் அமெரிக்கா பின்னிற்கிறது என்ற பட்டறிவு அது.

காதலித்து, கைப்பிடித்து, கட்டிலிலே சுகம்கண்டு, பொல்லூண்டி சாவதில் உடன்பாடில்லாதவன் நான். போகும் உயிர் இஸ்லாத்தின் விடுதலைக்காய் போக வேண்டும் என ஆசைப்பட்டவன். அரசியலும், இராணுவமும் புரியாத புற்தரைகளில் தும்பி பிடிக்கும் வயதிலேயே என்னை அறியாத சுந்திர உணற்ச்சியும், அநீதிக்கு எதிரான உளகுமுறலும் என்னுள் பொங்கியெழும்.


பதின்ம வயதுகளில் என் நண்பர்கள் தாவணிக் கனவுகளில் மிதந்த போது, மூன்று வெடிகளை (பட்டாசுகளை) ஒன்றாக வைத்து வெடித்துப் பார்க்கும் ஆசை தான் இரவுக் கனவுகளில் வந்து செல்லும்.

காலங்கள் நகர்ந்தன. இருபதுகளின் ஆரம்பங்கள் அவை. என் நண்பர்கள் காதல் ரசம் சொட்டும் கவிதைகள் படித்த போது எனக்கு மௌலான மௌதூதி (ரஹ்) அவர்களின் புத்தகங்களை படிக்க பிடித்தது. இஸ்லாமிய உலகும் இஸ்லாமிய உம்மாவும் இருக்கும் நிலை புரிந்தது. சமூகங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் புரிந்தது.


இறைவனின் பாதையில் மரணிக்க வேண்டும். அவனது அர்ஷின் (அரியணை) கீழ் வட்டமிடும் பறவையாக எனது றூஹு (ஆன்மா) பறக்க வேண்டும் என மனம் துடியாய் துடித்தது. வீர சுவர்க்கம் எனும் அந்த ஷஹாதத்தின் பாக்கியம் கிடைக்க என்ன செய்யலாம் எனவே தினமும் சிந்தித்தேன். என்னிடம் இருந்தவை இரண்டு. ஒன்று இஸ்லாமிய இலட்சியவாதம். இரண்டாவது நான் கற்றுக்கொண்ட மார்ஷல் ஆர்ட்ஸ் (சோட்டோகான் கராத்தே). இந்த இரண்டையும் வைத்து கொண்டு இஸ்லாத்திற்காக போராட வேண்டும் என்பதே என் கனவு, அவா எல்லாமே.


எங்கள் பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய இயக்கத்தின் பீரங்கி பேச்சாளர்கள் ஆப்கானிஸ்தான் பற்றி முழங்கினார்கள். சத்தியப்பாதையில் இலட்சிய பயணம் என்றார்கள். "சபீலுனா சபீலுனா அல்-ஜிஹாத்" என கோஷமிட்டார்கள். இந்த இஸ்லாமிய இயக்கங்களின் மெஸ்மரிஸத்தில் கட்டுண்டு போனவர்களில் நானும் ஒருவன். ஆர்வமுள்ளவர்களை பொறுக்கியெடுத்து ஆப்கான் அனுப்பினார்கள். ஆனால் இவர்கள் ஒரு போதும் தங்கள் பிள்ளைகளை அங்கு அனுப்பியதே கிடையாது. இந்த விவரம் எனக்கு பின்னாட்களிளேயே தெரிந்தது.


இறைவன் அந்த இலட்சிய கனவை நிறைவேற்றும் சந்தர்ப்பத்தை எனக்கு நல்கினான். ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் ஊடாக, “தலைமைத்துவ பயிற்ச்சிக்காக” என்ற பெயரில் நான் முதலில் பாகிஸ்தான் சென்றேன். பின்னர் அங்கிருந்து பெஷாவார் பயணம். நமது ஊரின் காய்கறி கடைகள் போல அங்கே தொங்கிய ஆயுதங்களை பார்த்து பிரமித்து போனேன். ரம்போ பார்ட் 03 பார்த்தால் உங்களிற்கும் அது ஞாபகம் வரும்.


என்னை அனுப்பிய இஸ்லாமிய இயக்கத்திற்கு சரியாக பார்த்தால் ஆப்கானை களமாகவும், பாகிஸ்தானை தளமாகவும் கொண்டியங்கிய புர்ஹானுதீன் ரப்பானியின் அமைப்பிற்கே என்னை அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் என்னை அனுப்பியதோ ஹிஸ்பி இஸ்லாமி எனும் குல்புத்தீன் ஹிக்மதியாரின் தலைமையில் இயங்கிய ஆப்கானின் பெரிய இராணுவ அமைப்பிடம்.


நாங்கள் வந்திறங்கிய பொழுதுகள் ஆப்கானிய ஜிஹாதின் பொற்காலமாகும். அப்பொழுது பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்த ஜெனரல் ஸியா-உல் ஹக் உலகில் உள்ள தனது பாகிஸ்தானிய எம்பஸிகளிற்கு ஒரு உத்தரவிட்டிருந்தார். போர்க்குணமுள்ள இளைஞர்களிற்கு விசா வழங்க பின்னிற்க வேண்டாம் என்பதே அந்த உத்தரவு.


தனது நம்பிக்கைமிக்க தளபதி ஜெனரல் அப்துர் ரஹ்மானின் நேரடி மேற்பார்வையின் கீழ் “ஒப்பரேஷன் ஆப்கானை” நடாத்திக்கொண்டிருந்தார் ஜெனரல் ஷியா. 1980-1987 லெப்டினன்ட் ஜெனரல் அக்தார் அப்துர் ரஹ்மான், 1987-1989 லெப்டினன்ட் ஜெனரல் ஹமீட் குல், 1989-1990 லெப்டினன்ட் ஜெனரல் ஸம்சுல் ரஹ்மான் காலு, 1990-1992 ஆஸாத் துராணி போன்றவர்கள் ஆப்கானில் பாகிஸ்தான் நடாத்திய ஜிஹாதில் முக்கிய ஐ.எஸ்.ஐ. டிரெக்டர் ஜெனரல்களாக செயற்பட்டவர்கள்.


இவர்களில் அக்தார் அப்துர் ரஹ்மான், மற்றும் ஹமீட் குல் போன்றவர்கள் முக்கியமானவர்கள். இஹ்திகாதே இஸ்லாமி, ஹிஸ்பி இஸ்லாமி, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்றனவும், மற்றும் ஐ.எஸ்.ஐ. ஒரு அணியாகவும், ஆப்கானிய இராணுவம் அதன் தளபதி மொஹமட் பாஹீமின் கீழும், யுத்த பிரபு ஜெனரல் அப்துர் ரஷீட் டொஸ்டம்(உஸ்பெக்) மறு அணியிலும் போராடிய காலம் அது.



முன்னையவர்களை அமெரிக்காவும், பின்னையவர்களை சோவியத் ரஷ்யாவும் வழி நடாத்தின என்பதே உண்மை. ஷேய்ஹ் அப்துல்லாஹ் ஆஸம், உஸாமா பின் லாதின், குல்புதீன் ஹிக்மதியார், கெமாண்டர் அஹ்மட் ஷா மசூத், மௌலவி யூனுஸ் காலிஸ், ஜலாலுதீன் ஹக்கானி, இஸ்மாயில் கான், முல்லா நகீப், அப்துல் ரஹீம் வர்தக், பஸால் ஹக் முஜாஹித், அப்துர் ரஸுல் ஸய்யாப், புர்ஹானுதீன் ரப்பானி போன்ற பல தலைவர்கள் ஆப்கானிய ஜிஹாத்தின் முதன்மை ஹீரோக்களாக திகழ்ந்தனர்.


இவர்களில் பஞ்சிஸ்தர் சிங்கம் கொமாண்டர் மசூத் வித்தியாசமானவர். இவரின் துப்பாக்கி குழலில் இருந்து அவர் இறக்கும் வரை கந்தக வாசமே வீசியது. ஆனால் இவர் அணி சார்ந்த அதன் தலைவரான ரப்பானியின் துப்பாக்கியில் இருந்து, அவர் பேசிய மைக்கில் இருந்து, அவரது வாயில் இருந்து என எல்லாவற்றிலுமே அமெரிக்க டொலர் வாசம் வீசியது. மற்றையவர் தளபதி அப்துல்லாஹ் ஆஸம் (ரஹ்).  ஜிஹாதிற்கு புதிய முகவரி எழுதிய மனிதர். இவர்களை பற்றி பின்னர் சொல்கிறேன்.


என்னுடன் எனது ஊரைச்சேர்ந்த இன்னொரு நண்பனும் இருந்தான். நாம் பிக்-அப்பில் ஏற்றப்பட்டு கோஸ்ட் மாகாணத்தின் மலைகளின் ஊடான பயணத்தின் பின்னர் ஒரு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டோம். அந்த முகாமின் பெயர் அல்-பத்ர் - 1. எனது முகாமிற்கு எப்படி அல்-பத்ர் என்ற பெயர் வந்தது?. அதன் பின்புல அரசியல் தான் என்ன? அங்கே உண்மையில் என்ன நடந்தது?  விபரங்களை எதிர்பாருங்கள்........


இன்ஷா அல்லாஹ் தொடரும்......





No comments:

Post a Comment