Tuesday, October 9, 2018

ஹிஜாமா சிகிச்சையால் ஜமாத்தே இஸ்லாமி அங்கத்தவர் உயிர் ஆபத்தான நிலையில்

ஆக்கம் : Iriz Shaheed
இன்னும் எத்தனை பேரை காவுகொண்டதின் பின்னர்,
எத்தனை குடும்பங்களில் நிரந்தர நோயாளிகளை உருவாக்கியதன் பின்னர் விழிக்கப்போகிறோம்?
இஸ்லாத்தின் பெயரால் வயிற்றுப்பிழைப்பு நடத்தும் பிணந்திண்ணிகளினால் ஒட்டு மொத்த சமூகமும் பதில் சொல்ல வேண்டிவரும்,
ஹலால் சர்டபிகேட் கற்றுத்தந்தது போதாதா?

“Enough is enough“
நண்பன் Zubair Sherifdeen பதிவு👇🏽
என் இனிய நண்பன் ரம்ஸி இப்போது கண்டி போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிறிவில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றார்
1). 23. 9. 2018 ஞாயிறு முழு நாளும் ஜமாஅத்தின் அங்கத்தவர் மாநாட்டிட்காக கடுமையாக உழைத்தவர், இரவு போனில் எனக்கு பேசும் போது கால் வலி இருப்பதாகவும் காலை வேலைக்கு வர முடியாது எனவும் அறிவித்தார். அவரது குரலில் வருத்தத்தின் தீவிரம் தெரியவே, டொக்டர் கிட்ட போய் மருந்து எடுங்க என்றேன். வீட்டில் எல்லா மருந்துகளும் உண்டு என்று பதிலளித்தார்.
(அவரது வீட்டில் அதிகமாக கை மருந்து செய்வது வழக்கம்)

2). மறுநாள் 24. 9. 2018 திங்கள் கிழமை அவர் தனியாக கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலைக்கு போய் எட்மிட் ஆனதாகவும் (ரம்ஸியின் மருமகன் என்னிடம் சொன்னார்), அன்று பின்நேரம் அவரைப் பார்க்கச் சென்ற அவரது மனைவி, எவ்வித சிகிச்சையும் அதுவரை வழங்க்ப்பட்டிருக்கிவில்லை என்ற காரணத்தால், தன் விருப்பத்தில் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்ததாகவும் செய்தி கிடைத்தது. (உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்)
குறிப்பு: கண்டி, கட்டுகஸ் தொட்டையில் விடுமுறை நாட்களில் நோயாளிகள் பாரமெடுப்பதில்லை வருபவர்களை பேராதனைக்கு அனுப்புவார்களாம்.

3). 24. 9. 2018 திங்கள் போயா தினம் என்பதால் அவருடன் கதைக்கவில்லை.

4). 25. 9. 2018 செவ்வாய் கிழமை இப்திகார் (ரம்ஸியுடன் நெறுங்கி வேலை செய்த எங்கள் சேல்ஸ் எக்ஸகடிவ்) வாகனத்தின் சாவியைப் பெற ரம்ஸியின் வீட்டுக்கு போன போது, வீட்டில் ரம்ஸி தனியாக நடக்க முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்த போது, வாங்க ஹொஸ்பிட்டலுக்கு போவோம் என அழைக்க, எனக்கு (CAB) "கெப்”பில் ஏற முடியாது எனசொன்னாராம். அப்படியானால் கொஞ்சம் இருங்க காரை எடுத்துக் கொண்டு வருகின்றேன் பத்தே நிமிடம் என்று சொல்ல, தனது விருப்பத்தை தெரிவிக்காத ரம்ஸி, எட்வான்ஸ் ஒரு தொகை ஒப்பிஸில் பெற்று தரும்படி கேற்கவே, சரியென சொல்லி திரும்பினார்.
குறிப்பு: இப்திகாரிடம் தனது தொடையின் முழுப்பகுதியையும் வெளிப்படுத்தி ரம்ஸி காட்டியுள்ளார். வெளித்தோற்றத்தில் மிகவும் சாதாரணமாக, நல்ல நிலையில் காணப்பட்டது. எவ்வித வீக்கமோ வேறு காயங்களோ இல்லை. எவ்வித எண்ணையோ மருந்தோ காணப்படவில்லை. தொட்டுப்பார்த்தபோது தொடை தசை இருக்கமாக இருந்தது.
5). 25. 9. 2018 செவ்வாய் மாலை எட்வான்ஸ் பணம் கொடுக்க இப்திகார் சென்றபோது, ரம்ஸி தனது தாய்வீட்டில் இருக்கின்றார். மருந்து எடுத்ததாகவும் கொஞ்சம் தேவளை என்றும் சொன்னார்.
குறிப்பு: அன்று காலை ரம்ஸி தன் சகோதரிக்கு கோள் பண்ணி ஆயுர்வேத டொக்டர் யாராவது இருந்தால் தன்னை அழைத்து செல்லுமாறு சொன்னார். அன்று மாலை பதின்மூன்றாம் கட்டைக்கு போய் பத்து போட்டுக்கொண்டு வந்து, அறுகில் இருந்த ஒரு டாக்டரிடமும் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறார். காலில் எற்பட்டிருந்த தசைப்பிடிப்பை சரிசெய்த குறிப்பிட்ட டாக்டர், இஜாமா செய்வதற்காக தயாராகவே, இஜாமாவா செய்யப்போரீங்க என ரம்ஸி கேட்டுவிட்டு பேசாமல் இருந்தார். தொடையில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களிலும் இன்னும் பல இடங்களிமாக மொத்தம் ஏழு இடங்களில் ரத்தம் வெட்டி எடுக்கட்டது.
பதின்மூன்றாம் கட்டைக்கு பத்து போட தனது மனைவியுடன் போனார்
இஜாமா செய்யும் இடத்திற்கு போய் அங்கு சிகிச்சை மற்றும் இஜாமா நடைபெறும் போது ரம்ஸின் சகோதரி மற்றும் ரம்ஸியின் மனைவி உடனிருந்தனர்.

6). 25. 9. 2018 செவ்வாய் இரவு உடல் ஈரலித்து கடுமையான விக்கல் ஏற்பட்டு இரவு முழுவதும் வேதனைப்படுகின்றார். (ரம்ஸியின் சகோதரி சொன்னார்)

7). 26. 9. 2018 புதன் அதிகாலை ஷியாம் (ரம்ஸியின் நெறுங்கிய உறவினர்) எனக்கு செய்தி சொல்கின்றார். உடனே ஹொஸ்பிடலுக்கு கொண்டு போகச் சொன்னேன்.

😎. 26. 9. 2018 புதன் பகல் பொழுது ரம்ஸி அவரது மனைவி மற்றும் உறவினர்களால் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார். அவரது கால் வீங்கி காணப்பட்டதற்கான காரணமாக கீழே விழுந்து அடி பட்டுவிட்டதாக ஹொஸ்பிடல் பதிவாளரிடம் தகவல் வழங்கப்படுகின்றது. காரணம் அவர்களுடன் சென்றிருந்த ஒரு சகோதரர், ஹிஜாமா மற்றும் சிகிச்சை செய்த நபருடன் தொலைபேசியில் உரையாடிய பின், ஹிஜாமா செய்யப்பட்ட விடயத்தை மறைக்க முடிவுசெய்திருந்தார்.

9). 26. 9. 2018 புதன் மாலை அதி தீவிர பிரிவில் போடப்பட்ட ரம்ஸியை பார்த்து விட்டு வந்த அவரது மனைவி, காலின் ஹிஜாமா செய்யப்பட்ட குறித்த இடம் பலுன் போல பயங்கரமாக வீங்கி இருப்பதாக சொல்லி அழுதார். நானும் ஷியாமும் தயவு செய்து இந்த செய்தியை டாக்டரிடம் இப்ப அவசியம் சொல்லுங்கள் என்று கட்டாயப்படுத்தவே, SICU பொறுப்பான டாக்டரிடம் இந்த தகவல் சொல்லப்பட்டது. அப்படியா காலில் வீக்கத்திற்கான காரணத்தைத்தானே நாங்கள் முழு நாளாக தேடிக்கொண்டிருக்கின்றோம் என அந்த முஸ்லிம் பெண் டாக்டர் கடுமையாக கவலை கொண்டார்.
குறிப்பு: 26. 9. 2018 புதன் மாலை காரணம் அறிய EICU வில் நான் விசாரித்தபோது 'செப்டிக்' மேலதிக விபரம் ICU டாக்டரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று ஒரு டாக்டர் சொன்னார்.

10). 27. 9. 2018 வியாழன் இரவு நான் விசாரிக்க போனபோது, கோமா நிலைக்கு போய்விட்டிருப்பதாகவும் கிருமி உடலின் முக்கிய பகுதிகளுக்கு பறவி விட்டிருப்பதாகவும் டாக்டர் சொன்னார்.

SICU பொறுப்பாளரான பிரபள சத்திர சிகிச்சை நிபுனரை,
ரம்ஸியின் நெருங்கிய உறவினர் எச் எம் ஷியாம், (ரம்ஸியின் சகோதரன்) உஸ்மான் ஆகியோருடன் நான் தனிப்பட்டமுறையில் சந்தித்து பேசிய போது;
மிகுந்த கவலையுடனும் கடும் கோபத்துடனும் பேச ஆரம்பித்தார்;

இது ஹிஜாமா செய்ததால் அதனுடாக கிருமி உள்ளே சென்று ஏற்பட்ட நோயாகும்.
மருத்துவ ரீதியில் அவசியமான அனைத்து முயற்சிகளையும் சிகிச்சைகளையும் வழங்கி வருகின்றோம்.
உண்மைதெரியாததால் இரண்டு நாட்களாக நாங்கள் வேறு நோய்க்கு மருத்துவம் செய்து கொண்டிருந்தோம். உண்மையை நீங்கள் சொன்னவுடன் தான் சரியான நோய்க்கான சிகிச்சையை ஆரம்பித்தோம்.
ஹிஜாமா செய்த விடயத்தை மறைத்ததன் காரணமாக சிகிச்சை இரண்டு தினங்கள் தாமதமானது. உடலில் பல முக்கிய உறுப்புக்களை கிருமி அடைந்துவிட்டது.
அதனால் அவ்உறுப்புக்கள் மருத்துவ உதவியுடன்தான் செயற்படுகின்றன.
கால் தொடைப்பகுதியின் நச்சுத்தன்மையுடைய தசையை அகற்றி விட்டோம். இன்பெக்க்ஷன் வயிறுவரை ஏறியுள்ளதால் அந்த பகுதியை நாளை மறுநாள் அப்புறப்படுத்துவோம்.

என்னிடத்தில் இந்த இஜாமா அப்சட்டான கேஸ்கள் ட்ரீட்பண்ணி பெரிய கட்டு பைல்கள் இருக்கின்றன. நான் அல்லாஹ்வின் அருளால் இருபது நிமிடங்களில் ஒரு நோயைக் கண்டறிந்து விடுவேன். இந்த கேஸில் கொடுக்கும் எந்த மருந்தும் ஆன்சர் பண்ணுதில்லை. பல டெஸ்ட் எடுத்து எடுத்து பார்க்கிறோம்.
முதலில் உண்மையை சொல்லியிருக்கலாம்.
நன்றாக இருந்த ஒருவரை கொலை செய்து கொண்டு வந்து போட்டீர்கள்
நாங்கள் முடிந்த எல்லாத்தையும் செய்கின்றோம். நீங்கள் இரண்டு விடயங்கள் செய்யுங்கள்.
1. தொழுது, நோன்புநோற்று, குர்பான் கொடுத்து அல்லாஹ்விடம் கேழுங்கள்.
2. ரம்ஸியின் பெயரில் ஒரு நல்லது நடக்க வேண்டுமானால், உங்களைச் சார்ந்தவர்களுக்கு தயவு செய்து சொல்லுங்கள் நோய் ஏற்பட்டால் தகுதிவாய்ந்த டாக்டரை நாடி சிகிச்சைப் பெறுவதை விட்டு விட்டு இந்த பிஜாமா, ஜின்வைத்தியம், சத்தியெடுத்தல், தடுப்பூசி போடாமை இது போன்ற மோட்டுத்தனமான செயல்களை செய்யவேண்டாமென்று கெஞ்சி கேட்டுக்கொள்ளுங்கள்.

மூன்று நர்ஸ்மார், இருபத்திநாளு மணித்தியாள விசேட கண்காணிப்பு டொக்டார்ஸ் இப்படி எல்லா வசதிகளையும் ஒரு உண்மையான நோயாளிக்கு செலவிட்டா பறவாயில்லையே, தானா தேடிக்கிட்டு வந்து வத குடுக்கிறாங்களே என்ற கோபம் உள்ளே வேலை செய்யும் ஊழியர்களுக்குள் பிரச்சினையாக மாறிவருகின்றது. இதுக்கெல்லாம் காரணம் எங்கட முட்டாள்தனந்தானே.

*ஏனைய மக்கள் யாருமே இல்லை எங்கட ஆக்கள் தானே இந்தமாதிரி முட்டாள்தனமான வேலையை செய்து முக்காவாசி உயிர் போனபிறகு இங்க ஓடி வர்ராங்க. அவர் பிழைத்து வந்தால் எல்லாருக்கும் நல்லம். என்றவர் எழுந்து கொண்டார் சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக அவரது PP க்ளினிக் டைம் எம்மோடு முடிந்து விட்டிருந்தது.
தற்போதைய நிலைமை:
* வயிற்றுப்பகுதியில் சிதைவடைந்த பகுதிகளை நீக்கம் செய்யும் சிகிச்சை நேற்று நடைபெற்றுள்ளது. நாளைதான் அதன் மாற்றம் தெரியும்.
* அறுகில் சென்று கதைத்தால் கண் திறந்து பார்க்கின்றார்.
* நேற்று அவரது சகோதரன் உஸ்மானின் கைகளை இறுக பற்றிப்பிடித்து கதைக்க முயன்றபோதும், கதைக்க முடியாத நிலையில் அவர் இருக்கின்றார்.
* முக்கிய உறுப்புக்கள் மருத்துவ உதவியில் தான் தொழிற்படுகின்றன.
* வாயின் மூலம் பட்டை பொறுத்தப்பட்டு உணவு செல்கின்றது.
* இன்னமும் SICU வில் இருக்கின்றார்.
உங்கள் மேலான துஆக்களை அவருக்காக வேண்டிக்கொள்கின்றோம்.


குறிப்பு :  மேற்படி ஆக்கத்தின் கருத்துக்கள் ஆக்கத்தை எழுதியவர்களுக்கே சொந்தம், அவை "ஜமாத்  கேம்ஸ்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை.






No comments:

Post a Comment